search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கார்டுகள் ரத்து"

    உத்தமபாளையம் தாலுகாவில் இறந்தவர்கள் பெயரில் பொருட்கள் வாங்கிய 106 ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டது.

    உத்தமபாளையம்:

    ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிகளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.

    அதிகாரிகள் சோதனையிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. தேனி மாவடத்தில் உத்தமபாளையம் 1,40,000 ரேசன் கார்டுகள் உள்ள பெரிய தாலுகாவாகும். இங்கு சுமார் 18 ஆயிரம் ஒரு நபர் ரேசன் கார்டுகள் உள்ளன.

    அதிகாரிகள் ரேசன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் 106 பேர் இறந்த பின்பும் அவர்கள் பெயரில் ரேசன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அந்த கார்டுகளை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

    மேலும் கூட்டு குடும்பத்தில் இருந்து கொண்டு தனிநபர் கார்டு பயன் படுத்துவோர் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் பெயரை குடும்பத்தில் உள்ள ரேசன் கார்டுகளுடன் சேர்த்து விட சிவில் சப்ளை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆத்தூர் தாலுகாவில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறாததால் சுமார் 1500 ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 10-ல் இருந்து 15 ஆயிரம் வரை ரேசன் கார்டுகளில் பிழை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சில இடங்களில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக சாமி படங்கள், நடிகர் நடிகைகள் படம் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால், இப்பிரச்னையை கம்ப்யூட்டர் பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிழை என அதிகாரிகள் சமாளித்தனர். ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நுற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு, இதுவரை ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வினியோகிக்கப்படவில்லை.

    புதிதாய் விண்ணப்பித்த பலரும், பல ஆண்டுகளாக தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை என்ற புகார் கூறுகின்றனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். பிழை இருந்தாலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பொது மக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கான பணிகளிலும் சுணக்கம் நீடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 14 மாதங்களுக்கு மேலாக, இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இ-சேவை மையங்களிலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறவில்லை. எனவே சுமார் 1500 ரேசன் கார்டுதாரர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக ரேசன் பொருட்கள் வாங்கவில்லை. இதன் காரணமாக தங்கள் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை உடனே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×